"மகரக் குழைகளும் ஊசலாட பங்கய மடமாதர் நோக்கி இருவேம் ஆட்ட - அவ்வூசலில் பாய்ந்திலது இவ்வூசல் என - நனி ஆட்டுதோறும் நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத் திங்கள் சாய" - (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் - ஊசல் பருவம்)
என்ற அடிகளில் அமுதாம்பிகை ஆடும் ஊசலின் கயிறு நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும் ஆனால் அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால் விரைவாக ஆடுகிறது என்றும் கூறியுள்ளார்.
இதனையே கலிலியோ ஊசலின் நீளம் குறித்த தம் ஆய்வில் ‘‘ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும்’’ என்றும் கூறியுள்ளார். இவ்வாறு ஆய்வுகளின் மூலமாக அறியப்பட்ட பல அறிவியல் உண்மைகள் வெறும் அனுபவத்தின் மூலமாகவும், பண்டைய தமிழர்களின் அறிவுத் தேடலின் விளைவுகளாகவும் பெறப்பட்டதை உணரலாம்.
அன்றைய மனிதன் கண்ட கனவை இன்றைய அறிவியல் முன்னேற்றம் நிஜமாக்கியது. இதைப் போன்று பல்வேறு சங்க பாடல்களை பார்க்கும் போது, தற்போதைய பேராசிரியர்கள் போல சங்க கால புலவர்கள் பல்வேறு துறைகளில் இருந்திருப்பார்களோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.