tamiltraditional.cf

Home | Sign Up | Log In
ஞாயிறு, 2024-05-05, 6:13 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
பழமொழி [2]
பொது அறிவு [4]
விடுகதைகள் [7]
சிறுவர் கதைகள் [25]
பாப்பா பாடல்கள் [10]
சிந்தனை துளிகள் [2]
விளையாட்டுக்கள் [0]
தெரிந்து கொள்ளுங்கள் [1]
ஆங்கிலம் கற்க [0]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » சிறுவர் உலகம் » சிறுவர் கதைகள் [ Add new entry ]

பசித்தவன் விசுவாசத்தை நம்பலாமா?
2012-12-12, 7:13 PM
கிணறு ஒன்றில் கங்காதத்தன் என்ற கிழத்தவளை ஒன்று வசித்து வந்தது. இந்தத் தவளையை அங்கிருந்த மற்ற தவளைகள் அடிக்கடி தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தது.

மற்ற தவளைகள் கொடுத்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிழத்தவளை இராட்டினத் தோண்டி வழியே வெளியே வந்து மற்ற தவளைகளை என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்தக் கிணற்றுக்கு அருகிலிருந்த பாம்புப் புற்று அதன் கண்ணில் பட்டது.

"நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் தவளைகளை இந்தப் புற்றிலிருக்கும் பாம்பின் உதவியோடு கொன்று விட்டால் என்ன?" என்கிற எண்ணம் வந்தது.

மெதுவாகப் பாம்புப் புற்றின் அருகில் சென்று பாம்பை நட்புக்கு அழைத்தது.

"உங்களுடைய பரம எதிரியான என்னுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவது ஏன்?" என்று கேட்டது அந்த பாம்பு.

"என்னுடன் இருக்கும் சில தவளைகள் என்னை தினந்தோறும் துன்புறுத்தி வருகின்றன. என்னால் பொறுக்க முடியவில்லை. அவற்றை அழிக்கத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன். வேண்டாதவர்களை எதிரியைக் கொண்டே அழிக்கலாம் என்று நீதி நூலில் கூட சொல்லியிருக்கிறது" என்றது அந்த கிழத்தவளை.

"என்னால் எப்படி உன் இடத்திற்கு வரமுடியும்?"

"நான் வரும் இராட்டினத்தின் வழியாக உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன்" என்றது தவளை.

பாம்பும் யோசித்தது.

நாமோ தினமும் உணவிற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது இப்படி வலிய வந்து உணவிற்கு வழி செய்யும் தவளையின் கோரிக்கையை நாம் ஏன் மறுக்க வேண்டும்? என்று நினைத்தபடி தவளையுடன் அந்த கிணற்றுக்குள் சென்றது.

அந்த பாம்பும் கிணற்றுக்குள் அந்த கிழத்தவளைக்குத் தொல்லை கொடுத்து வந்த தவளைகளை எல்லாம் தின்று அழித்தது. கிழத்தவளையும் மகிழ்ச்சியுற்றது.

ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை.

பாம்பு கிழத் தவளையைப் பார்த்து, "உன்னுடைய எதிரிகள் எல்லாம் அழிந்து விட்டபடியால் என் பசிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்." என்றது

கிழத்தவளையோ, "நண்பரே நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது . உங்கள் உதவிக்கு நன்றி. எனக்கு இனி உங்கள் உதவி தேவையில்லை." என்றது.

ஆனால் பாம்போ கோபத்துடன், "உன்னை நம்பித்தான் நான் இங்கு வந்தேன். இப்போது என்னுடைய இடத்தில் வேறு ஏதாவது வந்து குடியேறியிருக்கும். தினந்தோறும் எனக்கு நீயே ஒரு தவளையை உணவாகக் கொடுக்க வேண்டும். இல்லையேல் உன் கூட்டத்தில் இருப்பவர்களை நான் என் விருப்பப்படி பிடித்துத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்வேன்." என்று அச்சுறுத்தியது.

கிழத்தவளையும் பயந்து போய் தினந்தோறும் ஒரு தவளையை பாம்புக்குக் கொடுத்து வந்தது. கடைசியில் ஒருநாள் அது கிழத்தவளையின் மகனையும் தின்று தீர்த்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற கிழத்தவளையின் மனைவி, "நீங்கள் இந்தக் கொடியவனைக் கொண்டு வந்து நம் குழந்தையை மட்டுமில்லை, குலத்தையே அழித்து விட்டீர்கள். இனி நாமிருவர் மட்டும்தான் பாக்கி. நாமும் அழிந்து விடுவதற்கு முன்பு ஏதாவது சூழ்ச்சி செய்து அந்த பாம்பைக் கொன்று விடுங்கள் அல்லது நாமிருவரும் இங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவோம்." என்று எச்சரித்தது.

அந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பு தனக்குப் பசியாக இருப்பதால் "ஏதாவது கொடு" என்று கேட்டது.

உடனே கிழத்தவளையும், "நண்பரே நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இப்போதே என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்து தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன்." என்று மனைவியை அங்கிருந்து போகச் செய்தது.

சில நமிடங்கள் கழிந்த பின்பு, "நீ எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பாய்? நானே வேகமாய்ப் போய்த் தவளைகளை அழைத்து வருகிறேன்" என்றபடி இராட்டினத்தின் வழியே அக்கிணற்றை விட்டு வெளியேறியது.

தன் பசிக்கு உணவு கொண்டு வரச் சென்ற கிழட்டுத்தவளையும் அதனுடைய மனைவியும் ஒரு நாளாகியும் வராமலிருக்கவே பாம்பு ஏமாற்றமடைந்தது.

கிணற்றுச் சுவற்றிலிருந்த ஒரு பல்லியைப் பார்த்த அந்த பாம்பு, "பல்லியாரே, அந்தக் கிழட்டுத் தவளைக்கு நீயும் நண்பன்தானே, நீ அந்தத் தவளையிடம் சென்று, நான் அந்தத் தவளைக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று நான் உறுதியளித்ததாகச் சொல்லி பயப்படாமல் வரச் சொல்" என்று தகவல் சொல்லி அனுப்பியது.

பல்லியும் அந்தக் கிழட்டுத்தவளையைத் தேடிச் சென்று பாம்பு சொன்ன செய்தியைச் சொல்லியது.

அதற்கு அந்தக் கிழட்டுத்தவளை "பசித்தவன் விசுவாசம் நம்ப முடியாதது. அந்தக் கொடியவனிடம் நட்பு வைத்து என் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து விட்டேன். நான் இனி அங்கு வர மாட்டேன்." என்று சொல்லி அனுப்பியது.

இப்படித்தான் நாம் நம்முடைய சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தீயவர்களோடு நட்பு கொண்டால் அந்தத் தீயவர்கள் நம்மையும் சேர்த்து அழித்து விடுவார்கள்.

நட்பு கூட நல்லவர்களோடுதான் இருக்க வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்குத்தான்.


படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
Category: சிறுவர் கதைகள் | Added by: pandu
Views: 628 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz