உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி
(விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி
பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை
பிராணயாமம் எனப்படும்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குத் கூற்றை உதைக்குங் குரியது வாமே -திருமூலர்
பொதுவாக யோகத்தில் மூன்று விதமான மூச்சுகள் கூறப்படுகின்றன.
1. தோள்பட்டை சுவாசம் 2. மார்பு சுவாசம் 3. அடிவயிற்று சுவாசம்
நம் பிராணன் என்னும் உயிர்நிலை சக்தியிøனை வசப்படுத்தச் செய்யும் கலை இது. பிராணயாமத்தின் மூலம் தச வாயுக்களும் சீரடையும்.
பிராணயாமத்தின் நான்கு படிகள்
பூரகம்-மூச்சை உள்ளிழுத்தல் கும்பகம்-மூச்சை உள் நிறுத்துதல் ரேசகம்-மூச்சை வெளிவிடுதல் சூன்யம்-மூச்சை வெளிவிட்ட பின் கும்பகத்தில் உள்நிறுத்துதல்
பிராணயாமத்தின் பலன்கள்
மனஅழுத்தம் நீங்குகிறது. உடல் அசதி மற்றம் மன சோர்வு நீங்கி
சுறுசுறுப்பு மேலோங்குகிறது. உளவியல்ரீதியான பாதிப்பின்றும் 75%
விழுக்காட்டிற்கு மேலாக முன்னேற்றம் ஏற்படும். ரத்தஓட்டம் சீரடையும்.
நரம்பு மண்டலம் வலிமை பெறும். மூளையில் ரத்தஓட்டம் மிகுவதால் நினைவாற்றல்
அதிகரிக்கும். கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்கள் நம் உடலைவிட்டு முழுவதும்
நீங்கும். நம் உடலை, மனதை ஆரோக்கியமாகவும், முறையே வலிமையாகவும்,
வளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும். அளவுக்கதிகமான உடல் கொழுப்பைக் கரைத்து
விடும். ஆயுள் அதிகரிக்கும். நினைவாற்றல் மிக மிக அதிகரிக்கும். நம்
வயிறு, கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல்களை வலிமையாக்கி
சீரண மண்டலத்தைச் சீராக்கும். குரல் வளம் மிகும். ஆன்மிக பலம்
அதிகரிக்கும். அலைபாயும் மனது ஒடுங்கி தன்னம்பிக்கை மிகும். உள்ளொளி பெருகும். (ஆன்மிக உணர்வு) மேலோங்கி மனஆற்றல் சிறக்கும்.
சுத்தமான, காற்றோட்டமுள்ள இடத்தில் பயிற்சி செய்ய வேண்டும். தனிமையில்
அமைதியாக பயிற்சி செய்ய வேண்டும். அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு
ஓசோன் பரப்பினின்றும் (உயிர்க்காற்று) மிகுந்திருக்கும் வேளையில் செய்வது
மிக நல்லது. வெறும் வயிற்றில் அல்லது அரை கப் சுத்தமான நீரை அருந்திப் பின்
செய்ய வேண்டும். பத்மாசனம், சித்தாசனம், சுகாசனம் அல்லது வஜ்ராசனம் போன்ற
அமர்ந்த நிலை ஆசனங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் யோகம்,
பிராணயாமம் செய்வதே நல்லது. இரவு விழித்திருந்தாலோ, களைப்பாக இருந்தாலோ
பிராணயாமம் செய்யக்கூடாது. நம்முடைய ரத்த நாளங்கள் சுத்திகரிக்கப்பட்ட
பின்பே பிராணயாமம் செய்ய வேண்டும். எனவே ஆசனம் செய்து ரத்த நாளங்களைச்
சுத்திகரித்து விட்டுப் பின் பிராணயாமம் செய்வது நன்று.
(ஆசனத்திற்குப் பின் யோகம்)
காலை, மாலை குளித்த பின் செய்வது நல்லது. இல்லாவிடில் பிராணயாமம் செய்த
பின் அரைமணி நேரம் கழித்தே குளிக்கவோ அல்லது சாப்பிடவோ வேண்டும்.ஆசனத்தில்
அமர்ந்திருக்கும் பொழுது தலை, கழுத்து, முதுகு தண்டு ஆகியவை ஒரே
நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். வாய், நாக்கு சுத்தமாக கழுவப்பட்டிருக்க
வேண்டும். உடல் நலமற்ற நாட்கள் அல்லது தவிர்க்க முடியாத சூழல் காரணமின்றி
இதர எல்லா நாட்களும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவால் மட்டுமே வெற்றி
இலக்கினை அடைய முடியும்.
பிராணயாமத்தில் வகைகளில் சில
1. முக பஸ்த்திரிக வலிந்த உள் வெளிமூச்சு: கண்களை
மூடிச் செய்ய வேண்டும். ஆசனத்தில் அமர்ந்து இருகைகளையும் மேலே தூக்கும்
போது மூச்சை இழுத்து கீழிறக்கும் போது சத்தமாக வெளியிடவும். சிறிது சிறிதாக
வேகமாக உள்மூச்சு, வெளிமூச்சு என்று ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 60 முறை
செய்யலாம்.
பலன்கள் : நுரையீரலுக்கு அதிக பிராண வாயு செல்லும்.
மனஅழுத்தம் நீங்கும். கரியமில வாயு மற்றும் நச்சுப் பொருட்கள் பெருமளவு
உடலை விட்டு நீங்கும். மூளையின் முன்புறத்தில் பெருமளவு இரத்தம் சென்று
அப்பகுதியினை மிக மென்மையாக அதிர வைக்கும். மனநோய் நீங்கும். ஆண்மை
பெருகும். நரம்பு மண்டலங்களும் நாளமில்லா சுரப்பிகளும் தூண்டப் பெறும்.
மற்றும் பல நன்மைகள் பெருகும்.
எச்சரிக்கை : உயர் இரத்த அழுத்தம் இருதய நோய்,
ஹிஸ்டீரியா உள்ளவர்கள் இந்தப் பயிற்சியினைச் செய்யக்கூடாது. முதன்
முறையாகச் செய்பவர்கள் பயிற்சி ஆசிரியரின் உதவியுடன் செய்தல் மிக
முக்கியம்.
2. கபாலபதி: கண்களை மூடி வலது கையினை நாசிக
முத்திரையில் வைத்து செய்ய வேண்டும். பெருவிரலால் வலது நாசியினை அடைத்து
இடது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு பிறகு வேகமாக மூச்சை உள்ளிழுத்து
வெளியிட வேண்டும். 1 நிமிடத்திற்கு 10 முதல் 60 வரை செய்யலாம். பின்பு
மோதிர விரலால் இடது நாசியினை அடைத்து வலது நாசி வழியாக அதே போல் செய்ய
வேண்டும்.
பலன்கள் : முக பஸ்த்திரிகாவின் அனைத்து பலன்களும் கிடைக்கும்.
3. சுகப்பூர்வ பிராணயாமம்: ஆசனத்தில் அமர்ந்து நாசிக
முத்திரையில் வைத்து ஒரே நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்இழுத்து வெளி
விடுவது மூச்சை முதலில் வெளிவிட்டு பிறகு ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில்
உள்மூச்சு, வெளிமூச்சு 1:1 என இருக்கலாம். மெதுவாக 1:2 என்ற நிலைக்கு மாறி
விட வேண்டும். முதலில் இடது நாசியில் (சந்திர நாடி) முறையும் பின் வலது
நாசியில் (சூரிய நாடி) முறையும் செய்து மெதுவாக எண்ணிக்கையினை உயர்த்தலாம்.
பலன்கள் : இரத்த அழுத்தம் இதயநோய், மனஅழுத்தம்,
சர்க்கரை நோய், முதுகுவலி, மூட்டு வலி, தூக்கமின்மை, சோம்பல், ஞாபக மறதி
போன்ற பல நோய்கள் குணமாகும்.
4. நாடி சுத்தி பிராணயாமம்: ஆசனத்தில் அமர்ந்து நாசிக
முத்திரையில் மூச்சினை வெளியிட்டு ஆரம்பிக்க வேண்டும். வலது நாசியினை
அடைத்துக் கொண்டு இடது நாசியில் மூச்சினை உள்ளிழுத்து (பூரகம்) பின்
இருநாசிகளையும் அடைத்துக் கொண்டு (கும்பகம்) வலது நாசி வழியே மெதுவாக
மூச்சை வெளியிட வேண்டும் (ரேசகம்). பிறகு அதே போல வலது நாசியில் மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி இடது வழியாக வெளியிட வேண்டும்.
கால அளவு : ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தால் 1:1:1 என்று செய்து சில நாட்களில் 1:2:1 என்று நீட்டி பிறகு 1:4:2 என்ற அளவில் செய்யலாம்.
பலன்கள்: 72,000 நாடிகளும் (ட்யூபுலர் சேனல்ஸ்)
சுத்தப்படுத்தப்படுகின்றன. நுரையீரலின் கொள்ளளவு மிகும். ஆஸ்துமா, ஈஸ்னோ
பிலியாசைனஸ் மற்றும் பல நோய்களை வேரோடு அழிக்கலாம். நினைவாற்றல் பல மடங்கு
பெருகும். அலைபாயும் மனது ஒடுங்கும். உடல் புத்துணர்ச்சி பெரும். உளவியல்
ரீதியான பிரச்சனைகள், மனோ பயம் நீங்கும்.
எச்சரிக்கை : பயிற்சியாளரின் உதவியின்றி எந்த
பிராணயாமப் பயிற்சிகளும் செய்யக்கூடாது. இதய நோயாளிகள் கும்பக நிலையில்
மூச்சை உள்நிறுத்துதல் மிக குறைந்த அளவே இருக்க வேண்டும். அல்லது நோயின்
தன்மைக்கேற்ப கும்பகம் செய்யாமல் இருப்பது நல்லது. அதே போல ரேசகம் குறைந்த
மாத்திரையில் செய்ய வேண்டும்.
|